வணக்கம் உதவி நண்பர்களே,
அண்மிய காலங்களில் மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாகவும், அதனால் எமது இல்லப் பிள்ளைகள் எதிர்நோக்கியுள்ளள அசௌகரியங்கள் தொடர்பாகவும் தெரியப்படுத்தியிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து எம் குழந்தைகளின் நலன் தொடர்பாக அக்கறை செலுத்திக் கொண்டிருக்கும் அனைத்து உதவி நண்பர்களுக்கும் நன்றிகள். இதுபோன்று தொடர்ந்து எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி இல்லக் குழந்தைகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றோம்.
தொடர்ந்த அசாதாரண சூழலிலும் பிள்ளைகளின் படிப்பு சீர்குலைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு உதிரிகளாக இருக்கும் பிள்ளைகளைத் திரும்பவும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் விபுலாநந்தா இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் ஓரிரு நாட்களில் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் இடமொன்று எடுக்கப்பட்டு எல்லாப்பிள்ளைகளையும் ஒன்றிணைத்து அவர்களுடைய படிப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுவிடுமென்று நம்புகின்றோம். இருப்பினும் இதற்கான பொருளாதாரம் எதுவும் அற்ற நிலையில் நலன் விரும்பிகளை நம்பியே நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதே போன்று கதிரொளி இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்லடியில் வீடொன்று எடுத்து அதில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சக்தி இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரையம்பதில் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பெரும் இடநெருக்கடியுடனும் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலுமே இருக்கின்றனர். எதிர்வரும் வாரத்திலிருந்து இவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
மாணிக்கவாசகர், யோகர்சுவாமி இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தற்போது வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பதாக இல்ல நிருவாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இவ்விரண்டு இல்லங்களும் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருப்பதனால் இடப்பெயர்வுக்கான தேவையேற்படவில்லை.
இல்லப்பிள்ளைகள் தொடர்பாக எமக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றோம்.
நன்றி
ஜசிகரன்
(உதவி – இலங்கை)
~
உதவி பற்றிய எனது பதிவுகளுக்குச் செல்ல..
உதவி தளத்திற்கு செல்ல…
comments