வெளிச்சக்கூடுகளை முன்வைத்து.. மேலும் – சனன்
தொடர்பான சிறுகதை: வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…
*
முதல்ல பெட்டைக்கு என் நன்றிகள். குறித்த கதை கவனப் படாமல், சாதியம் பற்றிய ஹரியின் குறிப்புகள் முரண்வெளி சார்ந்து அதிக கவனம் பெற்றது குறித்து எமக்கு சில ஏமாற்றங்கள் இருந்தன. இது பெரும் பலவீனங்களைக் கொண்ட சிறுகதையெனினும் ஆவணப்பதிவு என்ற அளவில் விவாதத்தை கோரி நிற்கிறது. அதை அடையாளம் கண்டு கொண்ட இரண்டாவது நபராக இருக்கிறீர்கள் (முதலாவது ஆள் கய – மற்றவர்கள் பதிவர்) இருவரும் பெண்களாக இருப்பது குறித்த வியப்பும் ஒருபுறம் போகட்டும். ஆண்கள் தமது குறிகளைப் பேணுகிற அரசியலில் மாத்திரம் அக்கறையுடனிருக்கிறார்கள், அதிகமும் பெண்கள் தான் இக்கதையின் மனித வலியைப் புரிந்து கொண்டார்கள். மதி கந்தசாமி, கய, பெட்டை எல்லாருக்கும் எமது நன்றிகள்.
*
உண்மையிலேயே இக்கதை இராணுவம் செய்கிற அட்டூழியத்தை, அது குழந்தமை மீது செலுத்துகிற தாக்கங்களை / உடல் அனுபவித்திருக்கக் கூடிய வலியை சரியான விதத்தில் வெளிப்படுத்துகிற ஒன்று எனக் கூற முடியாது. பின்னூட்டமிட்டிருந்தவரான ‘பெயர் சொல்ல விருப்பமில்லை’ போன்றவர்களது பதிவுகளும் மிக மேலோட்டமானவையே. 96இன் பின்னர் யாழ்ப்பாணத்தின் தெருக்களில் திரிய நேர்ந்த ஒவ்வொரு சிறுவனும்/சிறுமியும் இவ்வாறான கதைகளுடன் தானிருக்கிறார்கள். அதிலொன்றாக இதைக் கொள்ள முடியும். இதைவிட கொடுமையான அனுபவங்கள் என் சக மாணவர்களுக்கு உண்டென்பதை நான் அறிவேன். மனவிகாரம், குழப்பங்கள், இன்னபிறவற்றுக்கு ஆளாகும் குழந்தைகளைப் போல இக்கதையின் கதை சொல்லி இல்லை. ஒரு குழுவாக ஈடுபடுவதால், அப்பாதிப்பு குறைந்து போயிருக்கலாம். ஆனால், கைவிடப்பட்ட வீடுகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு குதப்புணர்ச்சி செய்யப் பட்ட சிறுவர்களும், தயாராகாத யோனி கிழிக்கப் பட்ட சிறுமிகளும் கொண்டிருக்கக் கூடிய பயங்கர அனுபவங்களுக்கு முன்பாக இக்கதை ஒரு சிறு பொறி மட்டுமே.
இக்கதை கொண்டிருக்கக் கூடிய வலிமையான அம்சங்களில் ஒன்றாகவும் இதைக் கொள்ள முடியும் தான்.. தனக்கு நடக்கும் பாதிப்புகள் பற்றிய அறிதலின்றி அதில் ஈடுபடுதல் என்பதாக வாசித்துப் பார்க்கலாமா? தான் எதை இழந்து கொண்டிருக்கிறான் என்பது பற்றிய அறிதலின்றியே / தான் அனுபவிக்கப் போகிறவை எவை என்பது பற்றிய புரிதலின்றியே அக்குழந்தை இதெல்லாவற்றுக்கும் பலியாகிறது என்று கொள்ளலாமா?
இன்னொரு முக்கியமான விடயத்தை அபிப்பிராயம் தெரிவித்த தோழர்கள் காணத்தவறியிருக்கிறார்கள். கதை சொல்லி இராணுவத்தின் மீதான பரிவுப்பார்வை கொண்டவனாக இருக்கிறான். குறித்த சிப்பாயின் பல செயல்கள் ஒருவித அனுதாபத்துடன் சித்தரிக்கப் பட்டிருப்பதை காணலாம். அமௌனன் இட்டிருந்த பின்னூட்டம் சரியாகவே சொல்கிறது. மூல காரணங்கள் எவை? உண்மையில் எங்களது உடம்பின் துவாரங்களை ஆக்கிரமிக்கிற குறி பயந்து நடுங்குகிற சிப்பாய்களினுடையதா? இல்லை, மகிந்தவினதும் இதர பேரினவாத சக்திகளினதுமா? சிப்பாயின் ஆண்குறியை தனியே சிப்பாயின் ஆண்குறியாய் காணவியலாது.. அது மகிந்தவின், மல்வத்த பீடாதிபதிகளின் ஆண்குறி.
*
கதைசொல்லி சிப்பாயுடனான புணர்ச்சியின் சில அம்சங்களை விரும்புவனாகத் தான் காட்டப் படுகிறான். இன்னுமொரு சிறுவன் அவர்களது அணைப்புக்கு ஏங்குபவனாக இருக்கிறான்,
//பிறகு அப்பிடியில்லை. எனக்கும் உம்மை மாதிரி ஒரு மல்லி இருக்கு எண்டு சொல்லி கொஞ்சுவார் – அப்பா மீசை குத்தக் குத்தக் கொஞ்சுவாரே அப்பிடி நல்லா இருக்கும். சரியாக் கூசும். சிங்களம் சொல்லித் தருவார். என்னட்டத் தான் அவர் தமிழ் படிக்கிறவர். கன்ரீன் ரொபியள் எல்லாம் எனக்குத் தான்.’//
//பிறகு சின்னப்பிள்ளயள் தமிழ்கதைக்கிற ஸ்ரைல்ல கதை சொல்லுவார். மடியில ஏத்திவச்சு முள்ளுத் தாடியால உரஞ்சி உரஞ்சி சிரிப்பார். பிறகு பேசாமல் இருப்பார். ஒருக்கா கட்டிப் பிடிச்சு அழுதவர். அவர் சொல்லித்தந்த பாட்டுப் போல எங்கட மிஸ்ஸும் ஒரு பாட்டுச் சொல்லித்தந்தவா – குருவிக் குஞ்சே குருவிக் குஞ்சே எங்கே போகிறாய்…. நான் சிங்களப் பாட்டை தமிழில கொப்பின்ர பின்பக்கம் எழுதி வச்சிருந்தன்,//
இதை வியாக்கியானப்படுத்த நாங்கள் சிக்மன்ட் பிராய்டிடம் போக வேண்டாம். Neglected emotinal needs என்ற ஒரு பிரயோகம் போதும் என்று நினைக்கிறேன். மத்தியவர்க்க பெற்றோர் பெரிதும் தங்கள் குழந்தைகள் மீது எப்படி அன்பு செலுத்துவது என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இரகசியமான முறையில் மாறிப்போயிருக்கிற வாழ்சூழல் பற்றிய அறிதல்களற்ற அவர்கள் 96இன் பின்னான பிள்ளையொன்றுக்கு இருக்கக் கூடிய சிக்கல்களை புரிந்தவர்களாக இல்லை. தமது அந்தஸ்து பணம் என்பவற்றில் குறியாக இருக்கும் அவர்கள் ரியூஷன், பாடசாலை, ஸ்பெஷல் கிளாஸ் என்று பிள்ளைகளை அலைக்கழிக்கிறதோடல்லாமல் தாங்களு அலைகின்றனர். ஒரு புன்னகைக்குத் தன்னும் நேரமிருப்பதில்லை. இங்கு தான் paedophile நபர்கள் தமது நுழைவுக்கான சாத்தியப் பாடுகளைக் கண்டு கொள்கிறார்கள். அவர்களிடம் சாடிஸம் இல்லாத பட்சத்தில் குழந்தைகள் அப்புணர்ச்சியை விரும்பவும் செய்கின்றன. எங்கு பிழை விடுகிறோம் என்பது நல்லது. (இந்த இடத்தில் ஷ்யாமின் ஸ்விம்மிங் இன் த மொன்சூன் சீ, ப்ͫன்னி போய் போன்ற நாவல்களில் வரும் சில சம்பவங்களை உதாரணம் காட்டமுடியும். நான் நினைக்கிறேன் – ரொமேஷ் குணசேகரவின் ரீப்(f) இல் வரும் கதைசொல்லி கூட(வயது 11) சக உடலின் அருகாமை குறித்த வேட்கையுடனிருந்தான் என. கதைசொல்லியின் சகவேலைக்காரன் அவனைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முனைகையில் அது குறித்து அச்சமடைபவனாக இருக்கும் அச்சிறுவன், தன் எஜமானன் மீது ஒருவித நெருக்கம் உடையவனாக இருக்கிறான். எஜமானனுக்கு தேநீர் எடுத்துச் செல்லும் அச்சிறுவன் அவனது நெகிழ்வுற்ற ஆடைகளையும் சிறுபிள்ளைத் தனமான தனது எஜமானனின் உடல்வாகினையும் ஒரு வித லயிப்புடன் விபரிக்கிறான். ஷ்யாம்-ரொமேஷ் இரண்டு பேரது கதாநாயகர்களும் புறக்கணிக்கப் பட்டவர்களாக, உணர்வுத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாதவர்களாக இருக்கிறார்கள். சக உடலொன்றின் அணைப்புக்கான தேவை எங்கிருந்து எழுகிறது என்பதை அறியவிரும்புபவர்கள் சிக்மண்ட் பிராய்டை/இன்செக்யூரிட்டிகள் பற்றி கற்கவும். அல்லாது விடில் ஷ்யாம், ரொமேஷ் போன்றவர்களின் புனைவுகளை வாசிக்கவும்)(fஅன்னி போய் இல் வருகிற அர்ஜியின் உளவியல் ரீதியான தேவைகளை, தகப்பன் செலவரத்தினமோ தாய் நளினியோ கண்டு கொள்வது இல்லை. தாய் நளினி பொருத்தமற்ற விதத்தில் அவனுடைய எffஎமினட் டென்டென்சிகளை களைய முறபடுகிறாள். அர்Jஇயின் ஆண் சகோதரர்கள் அவனைப் புரிந்து கொள்கிற நிலையில் இல்லை. இது தான் ஷேகனை நோக்கி அவனை உந்துகிறது – இல்லையா. பாலுறவின் தேவை அல்ல அங்கே அர்ஜியை இழுப்பது, ஒரு சிறு புன்னகைக்கான, தலைதடவலுக்கான ஆதரவுக்கான ஏக்கம் தான்.இதையும் அமௌனின் சிறுவர்களையும் இணைவாசிப்புச் செய்து பார்க்கலாம். ‘வெளிச்சக்கூடுகள்’ சிறுவர்களின் குடும்பம் குறித்து தரப்பட்டுள்ள விபரங்களை கவனியுங்கள்.)
இக்கதையை முன்வைத்து விமர்சிக்க வேண்டிய இன்னுமொன்று யாழ்ப்பாண பள்ளிகளின் நாவலர் ஆசாரம். பிள்ளைகள் பாலியல் கல்வி பெறாதவர்களாய் இருப்பதால் இந்த நிலமைகள் மேலும் விகாரமடைகின்றன எனபது என் கருத்து. நான் தரம் ஒன்பதில் கல்வி கற்ற போதுதான் முதல் முதலாக சுகாதாரப் பாடப் புத்தகத்தில் பாலியல் கல்வி என்பது பேரளவுக்காவது தூவப்பட்டிருந்தது. புத்தக வினியோகத்தின் போது குறித்த பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தன. பல பாடசாலைகள் அப்பாடத்தை தொடவும் இல்லை. சுயஇன்பம் குறித்து அச்சமுற்று அன்ரி டிப்ப்ரெஷன் எடுக்கிற கனபேரை நானறிவேன். இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இப்படி சிறுவர்களை விழிப்புணர்வற்ற நிலையில் வைத்திருப்பது? தனக்கு நடப்பது ஒரு துஷ்பிரயோகம் என்பதை அப்பிள்ளை அறிந்திருக்குமாயின் இவை போல சம்பவங்களுக்கான சாத்தியங்கள் குறைவு அல்லவா? யார் பிழை விடுகிறார்கள்? சிங்களவனா? இல்லை தங்கள் கோமணம் கிழியவேயில்லை என்று கதை விடுகிற யாழ்ப்பாணத்தவர்களா?
பின்னூட்டமிட்டவர்கள் சிப்பாய்களுக்கு இருக்கக் கூடிய சிக்கல்களையும் புரிந்து கொள்வது தகும். அவர்கள் செய்வதை நான் ஆதரிக்கிறேன் என இது அர்த்தமாகாது, கோபத்தை கொஞ்சமாவது அடக்கிக் கொண்டு இப்படியான செயல்பாடுகளுக்கு எங்கனம் அவர்கள் தூண்டப்படுகிறார்கள்? எவையெவையெல்லாம் இது நோக்கி அவர்களைத் தள்ளுகின்றன. இவற்றைப் பரிசீலிப்பதன் மூலம் அதிகாரத்தின் மிகப்பெரும் ஆண்குறியை நீங்கள் காண முடியும்.
*
கதையில் என்னை மிக எரிச்சலூட்டிய அம்சம் அக்கதைசொல்லி/அமௌனன் பண்ணிக்கொள்கிற புனிதப்படுத்துகை தான். கதைசொல்லி மிக அப்பாவியானவனாகவும், மற்ற சிறுவனால் seduceபண்ணுப்படுபவ்னாகவும் காட்டப் படுகிறான். மற்றைய சிறுவன் seducerஆக காட்டப்படுகிறான். இது ஒருவிதமாக இடறுகிறது-நம்பகத் தன்மை இல்லை. தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக் கொள்ளும் முனைப்பு கதைசொல்லியிடம் இருப்பதை, அந்த முனைப்பு மற்ற சிறுவனின் வாயில் தூஷணங்களைத் திணிப்பதை (அதன் மூலம் தன்னை உயர்த்துவதை) தெளிவாக இனங்காணமுடிகிறது. கதையின் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் தான் புனிதப்படுத்துதல் அற்ற இயல்புத்தனம் தலை காட்டுகிறது: //எனக்குப் பெரிய புதினமாய்க் கிடந்துது. ஆனா அருக்குளிக்கிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு “ச்சீ! மூத்திரம்” எண்டு சொன்னன்.// பின்வரும் மொழிதலைக் கவனியுங்கள்: //உண்மையாவே அரியண்டமா இருந்துது// இதில் ‘உண்மையாகவே’ என்ற பதப்பிரயோகம் ஏன் இடம்பெறுகிறது? ‘அரியண்டமா இருந்தது’ என்ற மொழிதல் ஏன் போதுமானதாக இல்லை…? அமௌனனை மீறி வெளிப்பட்டிருக்கிற(தாய் நான் நினைக்கிற) இந்த மொழிதல் கதையின் ஒட்டுமொத்த புனிதப் படுத்தலுக்கு ஒரு பொட்டுக்கேடு தான். ‘உண்மையாவே’ என்று வாசிப்பாளரை நம்ப வைக்க முயற்சிக்கும் போது அதொன்றும் அப்படியாகவில்லை என சந்தேகம் வருகிறது!
நிரூபாவின் கதைகள் எங்கனம் தமது கதாநாயக/நாயகிகளுக்காக வில்லன்களை கதைப் பரப்புக்குள் உருவாக்கிக் கொண்டு இயக்கமுற்றனவோ அதே மாதிரியான துவிதஎதிர்மைச் சமன்பாடெனக் கொள்ளலாம். இதனால் தான் இந்தக் கதைக்குள் தீபனின் குரலைக் கேட்க முடியாமலிருக்கிறது. வழக்கமான போராதரவுப் பிரதிகளைப் போலன்றி சிப்பாயின் குரலையாவது (அவனது உடலசைவுகள் மூலம்) ஒலிக்க அனுமதித்ததற்கு அமௌனனுக்கு பாராட்டுகள். மற்றபடிக்கு இக்கதை(?!) பெருங்குறைகளை/நுண்ணரசியலை/விடுபடல்களை உடையது தான்.
*


5 Responses to “வெளிச்சக்கூடுகளை முன்வைத்து.. மேலும் – சனன்”
1. பொடிச்சி Says:
March 19th, 2007 at 1:58 pm
சனன்: உங்களுடைய நேரம் செலவளித்த பதிலுக்கு நன்றி. தொடர்பாய் தோணுகிறதை பிறகு எழுதுகிறேன். குறிப்பிட்ட சிறுகதையுடன், முழுதாய் முரண்வெளியை முன்வைத்து எழுதிய எனது பதிவை வார இறுதிக்கு முதல் உள்ளிடுகிறேன்.. அதை வைத்து நண்பர்கள் விவாதத்தைத் தொடர்வார்கள் என நம்பலாம்.
2. selvanayaki Says:
March 19th, 2007 at 2:54 pm
நல்லது பொடிச்சி நீங்கள் சனனின் விரிவான மறுமொழியைத் தனிப் பதிவாக்கியது. முரண்வெளி, மற்றவர்கள் போன்ற தளங்களை உங்களின் மூலமாகவே அறிந்துகொண்டேன். நன்றி.
3. பொடிச்சி Says:
March 20th, 2007 at 2:19 am
வருகைக்கு நன்றி செல்வநாயகி.
4. பொடிச்சி Says:
April 3rd, 2007 at 11:18 pm
முரண்வெளி புதிய தளம்: muranveli.net
5. amaunan Says:
April 4th, 2007 at 1:37 am
பொடிச்சி,
ungkaL karuththukkaLai ezuthuvathaaka solliyiruwtiirkaL..! ethirpaarkkiRoom.